Monday, March 28, 2011

சிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும்


சிசேரியன் அறுவை சிகிச்சை குறித்த நம் மக்களிடம் நிலவி வரும் சில மூடநம்பிக்கைகளும், அது குறித்த மருத்துவ விளக்கங்களும்


மூட நம்பிக்கை 1 : அறுவை சிகிச்சை செய்தபின்னர் தண்ணீர் குடித்தால் புண் சீழ் பிடிக்கும் : 
  • இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இது தான் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக அமைந்துவிடுகிறது.
  • தண்ணீர் குடிப்பதற்கும் புண் சீழ் பிடிப்பதற்கும் சிறிதும் தொடர்பு கிடையாது. 
  • அதை போல் தையல் பிரித்த பின்னர் குளிக்கலாம்
  • தாய்க்கு தண்ணீரே தராமல் இருப்பதால் வரும் பிரச்சனைகள் பல. அதில் முக்கிய பிரச்சனை தாய்ப்பாலின் அளவு குறைய வாய்ப்புள்ளது
  • தாய் தினமும் 4 லிட்டர் தண்ணீர் (ஜூஸ், இளநீர், மோர், நீராகாராம் எதுவென்றாலும்) குடித்தால் போதும். குழந்தைக்கு போதுமான பால் கிடைக்கும்
மூட நம்பிக்கை 2 : குளுக்கோஸ் ஏறும் போது தண்ணீர் குடிக்க கூடாது: 
  • இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று யூகிப்பது எளிது தான்.
  • அந்தக்காலத்தில் பொதுவாக வாய் வழியாக சாப்பிட முடியாத நிலைகளிலேயே சிரைவழி திரவங்கள் ஏற்றப்பட்டிருக்கும். 
  • அந்தக்காலத்தில் அதிகம் நடை பெற்றது வயிற்றுப்புண், அல்லது குடல் பூண் ஆகியவற்றிற்கான அறுவை சிகிச்சைகளே
  • எனவே அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களுக்கு வாய்வழியாக உணவு அளிக்கப்பட்டிருக்காது. சிரைவ்ழி திரவங்கள் ஏற்றப்பட்டிருக்கும்
  • எனவே சிரை வழி திரவம் ஏற்றினாலே வாய்வழியாக உணவு உட்கொள்ளக்கூடாது என்ற மூட நம்பிக்கை வந்து விட்டது.
  • ஆனால் இன்றோ பல மருந்து பொருட்களும் சிரை வழி ஏற்றப்படுகிறது 
  • அப்படி இருக்கும் போது அதை கூட சிரை வழி திரவம் என்று நினைத்துக்கொண்டு, தாயை பட்டினி போடும் “புத்திசாலிகள்”  பலர் இருக்கிறார்கள்
  • சிரை வழி திரவங்கள் ஏறிக்கொண்டிருந்தாலும் கூட, மருத்துவர் அனுமதித்தால், சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்த 6 மணி நேரத்திற்கு பிறகு தாராளமாக தண்ணீர் குடிக்கலாம். - 
மூட நம்பிக்கை 3 : சிசேரியன் பண்ணியதும் குறைந்தபட்சம் 6 மணி நேரம் மயக்க நிலையிலேயே இருப்பார்கள்.
  • அதெல்லாம் அந்த காலம். 
  • இப்பொழுது எல்லாம் உடனடியாக நினைவு திரும்பி விடும். 
  • அதுவும் பொது மயக்கம் இல்லாமல் முதுகில் ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்தால் மயக்கமே இல்லை
மூட நம்பிக்கை 4 :  எல்லாருக்குமே இப்போது தண்டுவட ஊசிதான். யாருக்கும் பொது மயக்கம் அளிக்கப்படுவது இல்லை
  • அப்படியெல்லாம் இல்லை. 
  • இப்பொழுதும் சிலருக்கு பொது மயக்கம் அளிக்கப்படுகிறது (அவர்களின் உடல்நிலை, நோய் ஆகியவற்றை பொருத்து)
மூட நம்பிக்கை 5 :  சிசேரியன் செய்தால் தாய்ப்பாலில் அளவு குறைவாக இருக்கும்
  • தாய்ப்பாலின் அளவிற்கும் சிசேரியனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
  • சுகப்பிரசவம் என்றாலும் அறுவை சிகிச்சை என்றாலும் தாய்ப்பாலின் அளவு ஒன்றுதான். Quantity is the same
மூட நம்பிக்கை 6 :  சிசேரியன் செய்தால் தாய்ப்பால் சிக்கிரம் வற்றி விடும்
  • தாய்ப்பாலின் அளிக்கும் நாட்களுக்கும் சிசேரியனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
  • சுகப்பிரசவம் என்றாலும் அறுவை சிகிச்சை என்றாலும் தாய்ப்பாலின் சுரப்பது என்பதும் ஒன்று தான் Duration of Lactation is the same
பால் சுரக்கும் அளவிலோ வேறுபாடு இல்லை, அளிக்கக்படும் நாட்களிலோ வேறுபாடு இல்லையென்றால் சிசேரியனுக்கும் தாய்ப்பாலுக்கும் சம்மந்தமே கிடையாதா
இல்லை ஒரு சம்பந்தம் இருக்கிறது.
  • சுகப்பிரசவம் என்றால் பால் சுரக்க தேவையான ஆக்ஸிடோசின் இரத்தில் இருப்பதால் உடனடியாக பால் சுரக்க ஆரம்பித்து விடும்
  • அறுவை சிகிச்சை என்றால் குழந்தை மார்பு காம்பில் வாய் வைத்தவுடன் சுரக்க ஆரம்பித்து விடும்
ஆனால் இந்த வித்தியாசம் initiationக்கு தானே தவிர வேறு எந்த வித்தியாசமும் கிடையாது

அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும் : குழந்தை பிறந்த உடன் குழந்தையை தாய்ப்பால் தர வேண்டும்


மூட நம்பிக்கை 7 :  ஒரு முறை சிசேரியன் செய்தால் அடுத்த முறை கட்டாயம் சிசேரியன் தான்

  • பல வகை காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்படுகிறது. 
  • இதில் சில காரணங்கள் அடுத்த முறையும் வரலாம். Recurrent causes
  • வேறு சில காரணங்கள் அடுத்த பிரசவத்தில் திரும்ப இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை Non Recurrent 
  • எனவே அடுத்த பிரசவம் சுகப்பிரசவமா, அறுவை சிகிச்சையா என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். 
  • இதில் பொது விதி கிடையாது
மூட நம்பிக்கை 8 :  சிசேரியன் செய்தால் பிறக்கும் குழந்தைகள் புத்திசாலியாக இருக்கும் !!

  • இதை யார் கிளப்பி விட்டது என்று தெரியவில்லை. ஆனால் பரவலாக கூறப்படுகிறது :( :(
  • இதில் பிரச்சனை என்னவென்றால் இதுவரை இதை யாரும் மறுத்து ஆராய்ச்சி கட்டுரை எழுதவில்லை 
சந்தேகங்களை கேட்கலாம். பதிலளிக்கத்தயார் :) :)

      No comments:

      Post a Comment