Friday, December 17, 2010

சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்?

சின்ன வயசுல, தூக்கத்துல இருக்கும்போது நாம பண்ண சில சேட்டைகளப் (?) பத்தி, அடுத்த நாள் காலையில நம்ம குடும்பத்தாரோ/பள்ளி, கல்லூரியில கூட தங்கியிருந்த பசங்களோ சொல்லி கிண்டல் செய்யும்போது, “ஏய் நான் ஒன்னும் அப்படியெல்லாம் பண்ணல, சும்மா பொய் சொல்லாதீங்கப்பா”ன்னு சொல்றவங்ககிட்ட வாய்ச்சவடால் விட்டு சமாளிச்சிடுவோம் (?).
ஆனா, கொஞ்ச நேரம் கழிச்சி, தனியா நாமளே யோசிச்சுப் பார்த்துட்டு, “ஐய்யீய்ய…..நேத்து தூங்கும்போது, நாம இப்படியா செஞ்சிட்டோம்?!”னு நம்மள நாமே நொந்துக்கிட்ட அனுபவம், கிட்டத்தட்ட நம்ம எல்லாருக்குமே இருக்கும்னு நெனக்கிறேன்?! அது என்ன சேட்டைன்னு கேட்டா, பினாத்துறது, பாட்டு பாடுறது (ரெண்டு பாட்டுமேதான்?!), புறண்டு விழுந்து விடுவது, தூக்கத்துலேயே எழுந்து வெளியே நடந்து போறதுன்னு இப்படி நிறைய சொல்லலாம். (எதாவது விட்டுப் போயிருந்தா மறுமொழியில கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க?!)
மேலே சொன்ன தூங்கும்போது செய்யும் சேட்டைகள்ல, “தூக்கத்துல ஏன் சிலர் நடக்கிறாங்க”ன்னுதான் நாம இன்றைய பதிவுல  பார்க்கப்போறோம். ஆனா, மேலே நான் சொல்லாத, ஒரு சுவாரசியமான சேட்டைய, நான் சின்னவயசுல தூங்கும்போது பண்ணியிருக்கேன். அது என்னன்னு பதிவுச்செய்தியோட முடிவுல சொல்றேன். இப்போ நாம பதிவுச் செய்திக்குப் போகலாமா…..
சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி, அடிப்படையில தூக்கத்தில் எத்தனை வகை இருக்கு, தூக்கத்தில் நடப்பதுன்னா என்னங்கிற ரெண்டு முக்கியமான விஷயங்கள நாம தெரிஞ்சிக்கிறது அவசியம்னு நான் நெனக்கிறேன்.
தூக்கத்தில் எத்தனை வகை இருக்கிறது?
தூக்கம் பற்றிய ஆய்வுலகில் மொத்தம் மூன்று நிலைகள் இருக்கிறது.
1. விழிப்பு நிலை (wakefulness)
2. அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை {(non-REM (rapid eye movement)}
3. அதிவேக விழி அசைவு தூக்க நிலை (REM sleep)- இது பெரும்பாலும் கனவுகளுடன் தொடர்புடைய நிலை!
தூக்கத்தில் நடப்பது என்றால் என்ன?
தூக்கத்தில் நடப்பது அப்படீங்கிறது, “மனிதர்களின் ஒருவகையான தூண்டப்பட்ட, குழப்பமான மனநிலை”ன்னு சொல்றாரு இதுபற்றிய ஆய்வு செய்த முனைவர் விசேஷ் கபூர். அதாவது, (அறிவியல்பூர்வமா சொல்லனும்னா) தூக்கத்தில் நடப்பது விழிப்பு நிலை மற்றும் அதிவேக விழி அசைகளில்லாத தூக்க நிலை அப்படீன்னு அர்த்தம்!
சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்?
உண்மையச் சொல்லனும்னா, சிலர் மட்டும் ஏன் தூக்கத்தில் நடக்கிறாங்க மத்தவங்க ஏன் நடக்கிறதில்லைங்கிற இந்த கேள்விக்கு இன்னும் திட்டவட்டமான/தெளிவான பதில் தெரியலைங்கிறதுதான் நிதர்சன உண்மை!  இருந்தாலும், மாங்கு மாங்கு ஆராய்ச்சி செஞ்சிட்டு, இப்படித் தெரியலைன்னு, கூச்சப்படாம உதட்டப் பிதுக்கினா இந்த உலகம் நம்மள கொஞ்சங்கூட மதிக்காதுங்கிறதுனால, (மக்களே….இதெல்லாம் மேலிருப்பானோட தற்குறிப்பேற்ற அணிதான் சரிஙகளா?!) செஞ்ச ஆய்வைப் பத்தின ஆய்வறிக்கையில திரு. விசேஷ் கபூர் என்ன சொல்லியிருக்காருன்னா…….

பொதுவா தூக்கத்தில் நடப்பதற்க்கு, குடும்ப மரபனுவியல் சம்பந்தமான காரணங்கள்கூட இருக்கலாமாம்?!  ஆனா,  பெரியவங்கள விட, குழந்தைங்கதான் பெரும்பாலும் தூக்கத்துல நடப்பாங்களாம். அதுக்கு காரணம், குழந்தைங்க தூங்கும்போது, மெதுவான அலை தூக்கம் (low-wave sleep), அதாவது “ஆழமான அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை” அப்படீங்கிற நிலையில்தான் இருப்பாங்களாம். இந்த நிலையிலதான் தூக்கத்துல நடக்கிற செயலே தொடங்குகிறது என்கிறது ஆய்வு?!
இது தவிர்த்த வேறு சில காரணங்களாக ஆய்வுகளில் சொல்லப்படுவது……
1. சரியான தூக்கமின்மை
2. ஜூரம்
3. மன உளைச்சல்
4. சில மருந்துகள் (ஊக்க மருந்துகள், sedatives, hypnotics, antipsychotics)
தூக்கத்தில் நடப்பதால் வரும் பாதிப்புகளும், தவிர்க்கும் வழிமுறைகளும்!
தூக்கத்தில நடப்பதால், விபத்துகள் ஏற்பட்டு நடப்பவருக்கும் பிறருக்கும் உடல் காயங்கள் எற்படலாம். இது தவிர, விவரிக்க முடியாத வித்தியாசமான செயல்களுடன் கூடிய தூக்கத்தில் நடப்பவர்களுக்கு, பெரிய பாதிப்புகள் ஏற்பட நிறைய வாய்ப்பு உண்டு என்பதால், அத்தகையவர்களை குணப்படுத்த வேண்டும் என்கிறார் கபூர்!
தூக்கத்தில் நடக்கும் குறைபாட்டிற்க்கான சில சிகிச்சை முறைகள:
1. ஆரோக்கியமான தூங்கும் பழக்கம். அதாவது, சரியான நேரத்தில் உறங்குவது, அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்காமல் இருப்பது இப்படி பல
2. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்குவது (தூக்கத்தினால் கிடைக்கும் ஓய்வை இழக்காமல் இருக்க)
3. இரவில் மது அருந்தும் பழக்கமுள்ளவர்கள், அதை அறவே அருந்தாமல் இருப்பது அல்லது குறைத்துக்கொள்வது
4. இது தவிர்த்த, மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு மருந்துகளும் கொடுக்கப்படுகிறது!
என்ன நண்பர்களே, ஏன் சிலர் தூக்கத்தில் நடக்கிறாங்கன்னு, இப்போ தெரிஞ்சிக்கிட்டீங்களா?
சரி, இப்போ நான் பதிவு தொடக்கத்துல சொன்ன என்னோட சுவாரசியமான சேட்டைக்கு வருவோம்…..
சின்ன வயசுல, பொதுவா தூங்கும்போது (மத்த (சில?) எல்லார்மாதிரியும், எப்பவாவது) எதையாவது பினாத்துற பழக்கம் எனக்கு இருந்ததுன்னு அம்மா சொல்லுவாங்க. இப்படித்தான் ஒரு முறை பினாத்தும்போது திடீர்னு, ஒரு முழு திருக்குறளையும், அக்ஷ்ரப் பிழையில்லாம அப்படியே சொன்னேனாம்.  என்ன குறள்னு இப்போ சரியா நியாபகம் இல்ல எனக்கு! (எத்தன பேரு இத நம்புவீங்கன்னு எனக்குத் தெரியல. ஏன்னா, நான் சொன்னேன்னு எங்கம்மா சொன்னப்போ நானே நம்பலைங்கிறதுதான் உண்மை!)
தூக்கத்தில் நடப்பது பற்றிய மற்றுமோர் ஆய்வறிக்கையை படிக்க இங்கு செல்லுங்கள்

No comments:

Post a Comment