Monday, December 12, 2011

உலகளாவிய ரசிகர்களை கொள்ளை கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 62 வது பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். உடல் நலமின்றி சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று திரும்பியுள்ள ரஜினி புதிதாய் பிறந்த வருடம் இது என்றால் மிகையல்ல. அதனால்தான் 61 ஆண்டுகளுக்கும் இல்லாத மகத்துவம் இந்த ஆண்டு கிடைத்துள்ளது.

மறுபிறவி எடுத்துள்ள ரஜினியின் பிறந்தநாளை அதீத உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் இந்த பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12 நாள் பிறந்த சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற சாதாரண மனிதர் பெங்களூரு நகரில் பேருந்து நடத்துனராக தனது பணியை தொடங்கினார்.

அதற்கு முன்பு அவர் போர்ட்டராகவும் இருந்துள்ளார். பின்னர் இயக்குநர் பாலசந்தரின் கண்களில் சிக்கி இன்று உலக ரசிகர்கள் போற்றும் உன்னத நடிகராக உயர்ந்திருக்கிறார். உலகளாவிய சிறந்த நடிகர்களுள் ஒருவராக ரஜினி பார்க்கப்படுவதற்குக் காரணம் அவர் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு தன்னை மாற்றிக்கொள்வதுதான்.

அபூர்வராகங்களில் தொடங்கிய ரஜினியின் திரையுலக வாழ்க்கை எந்திரன் வரை 36 ஆண்டுகாலம் சினிமா வெற்றி தோல்விகளுக்கப்பால் தமிழ் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சில் அவரை மண்ணின் முடிசூடா மன்னனாக வலம் வர வைத்துள்ளது.

ஸ்டைல் மன்னன்

ரஜினிகாந்த் தான் நடிக்கும் திரைப்படங்களில் புகுத்திய ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது. அதற்காகவே அவருக்கு ஒரு தனி ரசிகர்வட்டம் உருவானது. நினைத்தாலே இனிக்கும், முரட்டுக்காளை, மனிதன், ராஜாதிராஜா அண்ணாமலை,தளபதி உள்ளிட்ட படங்களும், இன்றைய எந்திரன் வரை ரஜினியின் ஸ்டைல் மற்றும் பஞ்ச் வசனத்திற்காகவே தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் இருக்கின்றனர்.

உலகளாவிய ரசிகர்கள்

ரஜினி மீது அதீத அன்பு கொண்டுள்ளவர்கள் அவரது ரசிகர்கள் மட்டுமல்ல அவரை திரைத்துறை என்பதையும் தாண்டி ரசிக்கும் ஏராளமான மக்கள் என்பது தற்போது ரஜினிக்கு உடல்நலமில்லாமல் போனபோது தான் உண்மையாக அறியமுடிந்தது. அந்த அளவிற்கு அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத இடம்பிடித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் மிகையாகாது.

அடுத்த ஆண்டு ரஜினிகாந்த் பிறந்தநாள் உலக பிரசித்தி பெற்ற நாளான 12-12-12 அன்று வருவதை ஒட்டி மிகச்சிறப்பான முறையில் கொண்டாட ரஜினி ரசிகர்களும், அவருடைய குடும்பத்தினரும் இப்போதே திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment