Monday, December 12, 2011

நான் +2 படிக்கும் யுவதி. பெயர் சொல்ல விரும்பவில்லை.

நான் +2 படிக்கிறேன். நானும், என் தங்கையும் பிறந்ததிலிருந்து பக்கத்து வீட்டிலேயே வளர்ந்து வந்தோம். பக்கத்து வீட்டு மாமி, எங்களை அன்புடன், தங்கள் வீட்டு பெண்களைப் போல பராமரித்து வந்தாள்; ஆனால், மாமா சிறுவயதிலே இருந்து என் தங்கையை தன்னுடைய காம உணர்ச்சிக்கு பயன்படுத்தி வந்தார். சிலமுறை நானும், அவர் உணர்ச்சிக்கு பலியாகி இருக்கிறேன்.

வயதுக்கு வந்த பிறகு, என் தங்கை அவரிடமிருந்து சாமர்த்தியமாக விலகி விட்டாள்; ஆனால், என்னால் முடியவில்லை. அவர் என்னை, இன்றும் நன்றாக உபயோகப்படுத்திக் கொள்கிறார். அவரது கை, என் உடலில் படாத இடம் இல்லை. உடலுறவைத் தவிர மற்றதெல்லாம் செய்கிறார்; என்னால் தடுக்க முடியவில்லை. எனக்கு வேண்டியதெல்லாம் வாங்கி தருகிறார். செலவுக்கு பணம் கொடுக் கிறார். என்னை அவருடைய மனைவி போல உபயோகப்படுத்திக் கொள்கிறார். சில சமயம் நான் மறுத்தால், அழுது விடுகிறார். அந்த அழுகைக்கு நான் பணிந்து விடுகிறேன். 

எங்களை, அவருடைய மனைவி உட்பட யாரும் சந்தேகப்படவில்லை; அந்த மாதிரி நடந்து கொள்கிறார். சிலசமயம் நான் அவரை, "இதெல்லாம் செய்கிறீர்களே... உங்களுக்கே நன்றாக இருக்கிறதா?' என்று கேட்டால், "இதிலென்ன குறைந்துவிடப் போகிறது. உன்னை என்ன கெடுத்து விட்டேனா... இல்லையே! சும்மா தடவுவதாலும், கிஸ் கொடுப்பதாலும் எனக்கு இன்பம், உனக்கு இன்பம்; பேசாமல் போ...' என்று சொல்கிறார். நான் செய்வது பயங்கர குற்றம் என்று எனக்கே தெரிகிறது. சிறு குழந்தையிலிருந்து அவர் என்னை வளர்த்ததால், அவரிடம் எனக்கு எவ்வித கூச்ச உணர்வும் வர மாட்டேன் என்கிறது. இதிலிருந்து நான் மீள்வது எப்படி? தயவு செய்து வழி சொல்லுங்கள். ஆனாலும், அவர் மிக நல்லவர், இந்த விஷயத்தை தவிர! 

அன்புள்ள மகளுக்கு —

நீயும், உன் தங்கையும் பரிதாபத்திற்குரிய முட்டாள் பெண்கள். கதிரியக்கக் குட்டையில் குளிக்கும் கிராமத்து சிறுவன் போலிருக்கிறாய். கசாப்புக்கடைக்காரன் வீட்டில் வளரும் பண்டிகை வான்கோழி போலிருக்கிறாய்.

நீயும், உன் தங்கையும் பக்கத்து வீட்டு மாமாவின் காமவெறிக்கு, ஆறு - ஏழு ஆண்டுகளாக இரையாகி வந்திருக்கிறீர்கள்; இது, யார் தவறு?
முழுக்க, முழுக்க உன் பெற்றோர் தவறுதான். தன்னுடைய வீட்டில் என்ன நடக்கிறது? பக்கத்து வீட்டுக்கு போய், நம் மகள்கள் என்ன செய்கின்றனர் என்பதை, குறிப்பாக, உன் தாய் கண்காணிக்காமல் இருப்பது அவலமான விஷயம். உன் தந்தை வீட்டுக் கடமைகளை நிறைவேற்றுவதில் பெரிய பூஜ்யம் என நினைக்கிறேன். உன் தாயார் ஒரு ஆடம்பரப் பிரியை அல்லது சினிமா, கோவில் கிறுக்கராய் இருப்பார் என யூகிக்கிறேன். செக்ஸ் புறத்தாக்குதலுக்கு உட்பட்டுவரும் மகள்களின் உடல், முகமாற்றத்தை உன் தாயால் ஏன் அனுமானிக்க இயலவில்லை? உங்களுக்கும், உங்களது தாயாருக்கும் சரியான செய்தி தொடர்பு இல்லாததற்கு யார் காரணம்?
மகளே... உன்னுடைய விஷயத்தில் இரண்டாவது குற்றவாளி பக்கத்து வீட்டு மாமிதான். கணவனின் கயமைகளை மோப்பம் பிடித்து, அவனது தவறு செய்யும் இரு கைகளை ஒடித்திருக்க வேண்டும். செய்த தவறுக்கு பிராயசித்தமாக அவன் காலம்பூராவும் ஒரு மாற்றுத் திறனாளியாக அலையட்டுமே.

பக்கத்து வீட்டு மாமா - மாமிக்கு குழந்தைகள் இல்லையா, பக்கத்து வீட்டு சகோதரிகள் நம் வீட்டுக்கு வந்து, நம் அப்பனுடன் விகற்பமாக பழகிவிட்டு போகின்றனரே என்று அவர்கள் யோசிக்கவில்லையா?

மூன்றாவது குற்றவாளி, உன் தாயும், நீயும். விவரம் தெரியாத வயதில் அவனுக்கு உடன் பட்டீர்கள். இப்போது, உன்னை விட இளையவள் விபரீதம் புரிந்து, விலகி விட்டாள். நீயோ இன்னும் அந்த அசிங்கத்தை பூசி நிற்கிறாய். குடிநோயாளி போல அவனது ஈனச்செயல்களுக்கு உன் உடம்பு அடிமையாகி விட்டது.

நான்காவது குற்றவாளி நீங்களிருக்கும், தெருவின் மக்கள். எங்கிருந்தோ தீய்ந்து போன வாசனை கிளம்புகிறதே என அவர்கள் ஏன் மோப்பம் பிடிக்கவில்லை?

இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

உன் தாயாரிடம் தனியாக முறையிட்டு, நீங்கள் அவரின் வீட்டுக்கு போகாமலும், அவர்கள் உங்கள் வீட்டுக்கு வராமலும் இருக்கும்படி செய்ய வேண்டும்.

மாமா என்ற உறவுப் பெயரில் ஒளிந்திருக்கும் காமக் கொடூரனை கடுமையாக எச்சரி. இனி, தவறான எண்ணத் துடன் நெருங்கினால், போலீசில் புகார் செய்வோம். மைனர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தகுந்த தண்டனை பெறுவாய். உன் குடும்பம் சிதறிப் போகும் என எச்சரி.

மஞ்சள், சந்தனம், வேப்பிலை, துளசி, செம்பருத்தி பூக்கள் இட்ட நீரை தலைக்கு குளித்து, கந்தசஷ்டி கவசம் கூறி, சூன்யக்காரனின் பிடியிலிருந்து உடலையும், மனதையும் விலக்கு. 

அந்த காமக் கொடூரன் உன் உடலை, ஐந்தாறு வருடங்களாக தவறான வழிகளில் பயன்படுத்தி இருக்கிறான். அதனால், நீ எதிர்காலத்தில் எந்த ஆணின் மீதும் எளிதில் வசப்படுவாய். ஒரு பிசாசிடமிருந்து விலகி, இன்னொரு பிசாசிற்கு இரையாகி விடக் கூடாது நீ. ஆகையால், அடுத்த எட்டு வருடங்களுக்கு அவர்களிடம் எச்சரிக்கையாக பழகு. மனதை அடக்கி, படிக்க முடியவில்லை என்றால், அடுத்த மூன்று வருடங்களுக்கு பிறகு பட்டப்படிப்பு முடித்த பிறகு, பெற்றோரிடம் சொல்லி திருமணம் செய்து கொள்.

இக்கடிதமும், கடிதத்திற்கான பதிலும் பெற்றோருக்கான எச்சரிக்கை மணி. உங்களின் எந்த வயது பெண் குழந்தைகளுடனும், எந்த புனிதமான உறவையாவது சொல்லி பழக நினைக்கும் எந்த வயது ஆண்களையும் விலக்கி வையுங்கள். தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா, ஒன்றுவிட்ட மூத்த சகோதரர்கள் உறவுமுறைகளில் வரும் ஆண்களும் கூட ஆபத்தானவர்களே!
பத்து வயது நிரம்பி விட்டால், பெண் குழந்தைகளிடம் தாய்மார்கள் பாலியல் வன்முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி விட வேண்டும்.

No comments:

Post a Comment