Sunday, December 11, 2011

1 முதல் 10 வகுப்பு வரை மாதாந்திர உதவித் தொகை!


 தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

'சமூகநீதியை நிலைநாட்டுவதில் முன்னோடியாக திகழும் முதல்வர் ஜெயலலிதா பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ஏராளமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள்.

இதன் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு பள்ளிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், விடுதியில் தங்காமல் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ரூ.25 வீதம் 10 மாதங்களுக்கும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரைபயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ரூ.40 வீதம் 10 மாதங்களுக்கும், 9 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ரூ.50 வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

இதே போன்று விடுதியில் தங்கி 3ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ரூ.200 வீதம் 10 மாதங்களுக்கும், 9ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ரூ.250,- வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இது தவிர, தனி மானியமாக ஆண்டொன்றுக்கு ரூ.500 வழங்கப்படும்.

ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த மாணவ,மாணவியர் இதனால் பயனடைவார்கள். இதற்கென, 11 கோடியே 32 லட்சம் ரூபாய் ஒப்பளிப்பு வழங்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்,' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment