Wednesday, July 6, 2011

ரைஸ் குக்கரிலும் மொபைல் ரீசார்ஜ் பண்ணலாம்

ஜப்பான் நிறுவனம் கண்டுபிடித்துள்ள ‘குக்கர் சார்ஜர்’ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 
ஜப்பானின் ஒசாகா நகரை சேர்ந்த நிறுவனம் டி.இ.எஸ். நியூஎனர்ஜி. எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து வருகிறது. இதன் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு ‘தெர்மோ எலக்ட்ரிக் குக்பாட் சார்ஜர்’. பெயர்தான் மலைக்க வைக்கிறது.

ஆனால் இது டீ, வெந்நீர் போடுவது போன்ற சாதாரண பாத்திரம்தான். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அடுப்பை பற்றவைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் வெளிவரும் நீராவி, பிரத்யேக அறைக்குள் செல்கிறது. அதில் இருக்கும் சிறிய ரக டர்பைன் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்உற்பத்தி தொடங்கியதும் சிறிய லைட் எரிகிறது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள யுஎஸ்பி போர்ட்டை செல்போனில் சொருகினால் சார்ஜ் ஏறத் தொடங்குகிறது.செல்போன் மட்டுமின்றி ஜிபிஎஸ் கருவிகள், எம்பி3 பிளேயரையும் இதன் மூலம் சார்ஜ் செய்ய முடியும். உணவையும் சூடாக்கிக் கொள்ள முடியும். இதன் விலை ரூ.13 ஆயிரம். தற்போது ஜப்பானில் பல வீடுகளில் இந்த வகை சார்ஜரை பார்க்க முடிகிறது. இதுபற்றி டிஇஎஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கசுஹிரோ புஜிடா கூறியதாவது: கடந்த மார்ச் 11-ம் தேதி ஜப்பானை உலுக்கிய பூகம்பம், சுனாமிதான் இந்த கண்டுபிடிப்புக்கு தூண்டுகோலாக இருந்தது. 
 
சுனாமி ஏற்பட்ட நேரத்தில் பல பகுதிகளில் மின்இணைப்பு முழுவதுமாக துண்டாகிவிட்டது. யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் உதவிக்கு அழைக்க முடியாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் செல்போனை சார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிலையை உண்டாக்கவே இதை கண்டு பிடித்துள்ளோம். ஜப்பான் மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.இவ்வாறு கசுஹிரோ கூறினார்.

No comments:

Post a Comment