Monday, June 27, 2011

அழாதே அம்மா. கனிமொழியின் மகன் உருக்கம்

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மே 20ல் அவர் சிறையில் அடைக்கப்பட்ட போது, "வெளியே வந்து விடுவோம்' என்ற, நம்பிக்கையில் புன்னகையுடன் தான் இருந்தார்.சி.பி.ஐ., கோர்ட், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என, அனைத்தும், அவரது ஜாமின் மனுவை நிராகரித்து விட்டன. இதனால், நம்பிக்கை இழந்த கனிமொழி, சிறையில், 15 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறை அதிகாரி சுனில் குப்தா தெரிவித்ததாவது:எப்போதும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்படுகிறார். "சில நேரங்களில் தன் மகன் ஆதித்யாவை நினைத்து அழுகிறார். அவரது அறையில், 28 சேனல்கள் கொண்ட, "டிவி' வைக்கப்பட்டுள்ளது. எப்போதாவது அதைப் பார்க்கிறார். சில நேரங்களில் எதையாவது எழுதிக்கொண்டிருக்கிறார்.அவர் கவிதை எழுதுகிறாரா அல்லது தன் அனுபவங்களை எழுதுகிறாரா என்பது தெரியவில்லை. அவரை சந்திக்க வருபவர்களுடம் பெரும்பாலும் மகனை பற்றியே பேசுகிறார்.இவ்வாறு சுனில் குப்தா தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட் ஜாமின் மறுத்த நிலையில் கடந்த, 23ல், மகளை சென்று பார்த்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் மகள் கனிமொழி மிக மோசமான சூழ்நிலையில் சிறையில் வாடுவதாக தெரிவித்தார். டில்லி வெயிலின் வெப்பம் தாங்காமல் கனிமொழியின் உடலில் கொப்புளங்கள் தோன்றியுள்ளன என்றும் கூறினார்.
இதற்கு பதிலளித்துள்ள திகார் சிறை அதிகாரி சுனில் குப்தா, " நாட்டில் உள்ள அனைத்து சிறைகளுக்கும் முன் உதாரணமாக திகார் சிறை உள்ளது. இதை தேசிய மனித உரிமை கமிஷனும், ஐகோர்ட்டும் ஏற்றுக் கொண்டுள்ளன. திகார் சிறை வளாகத்தில் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற, சிறை அதிகாரிகளின் அனுமதியை பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கனிமொழிக்கு மன வருத்தம் இருந்தாலோ, உடலில் கொப்புளங்கள் இருந்தாலோ, அதற்கு அவர் தாராளமாக சிகிச்சை பெறலாம்' என்றார்.

No comments:

Post a Comment