Thursday, May 19, 2011

கலெக்டர் கார் சிறுமி காலில் ஏறிய கொடுமை

கரூர் கலெக்டர் கார் மாரியம்மன் கோவிலில், அங்கப் பிரதட்சணம் செய்த சிறுமியின் காலில், ஏறியது. 

கரூர், இரட்டை வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் மேகலா (12). லாலாப்பேட்டை அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறார். விடுமுறைக்கு, தன் தாத்தாவுடன், கரூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். கோவில் வெளிப் பிரகாரத்தில், அங்கப் பிரதட்சணம் செய்வதற்கு படுத்தார். 

அப்போது, நகராட்சி ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற மண்டகப்படி பூஜையில் கலந்து கொள்ள, கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி, "ஸ்கார்பியோ' காரில் வந்தார். கோவிலுக்கு முன் பக்தர்கள் நெரிசல் நிறைந்த, குறுகலான பாதையில், கலெக்டர் கார் வந்தது. 
அந்தப் பாதையில், அங்கப் பிரதட்சணத்துக்கு மேகலா படுத்திருந்ததை கவனிக்காத கார் டிரைவர், அவர் கால் பாதம் மீது காரை ஏற்றி, சிறிது தூரம் சென்று நிறுத்தினார். மேகலாவின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தோர் பதறியபடி ஓடி வந்தனர். "ரேடியல்' டயர் என்பதால், சிறுமியின் காலில் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை. 

காரை விட்டு இறங்கிய கலெக்டர் உமாமகேஸ்வரி, பாதிக்கப்பட்ட மேகலாவிடம் நலம் விசாரிக்காமல், அவரை மருத்துவமனையில் சேர்க்கும்படி கூறி விட்டு, "விறுவிறு'வென கோவிலுக்குள் சென்றுவிட்டார். கலெக்டரின் அலட்சிய போக்கால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவத்தை பத்திரிகையாளர்கள் கவனித்துவிட்டதால், சிறுமியை கலெக்டர் காரில் ஏற்றி, கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

No comments:

Post a Comment