Tuesday, January 4, 2011

ஆற்றலரசிக்குப் பத்துக் கேள்விகள்

வழக்கம் போல் சங்கத்துக்கு வந்த தபால் பையை நம்ம பாண்டியும் நானும் பாத்துகிட்டு இருந்தோம். துபாய் பக்கமா இருந்து நம்ம துபாய் ராசா ஒரு மூணு கிலோ பேரீச்சம் பழமும் கூடவே கிலோ கணக்குல்ல பாசமும் அனுப்பியிருந்தார். பிரிச்சுச் சாப்பிட்டோம் நல்லாயிருந்துச்சு... பேரீச்சம் பழத்தைத் தான்ய்யா சாப்பிட்டோம்

ச்சே விஷயத்துக்கு வர்ரோம்...

நமது கைப்புள்ள இதழ் மாதிரி புதரகத்துல்ல நமது புதர் ன்னு ஒரு பேப்பர் வருதாம் அந்தப் பத்திரிக்கையிலிருந்து பொன்ஸ் அக்காவுக்கு ஒரு லெட்டர் வந்து இருந்துச்சு.

வரு,வா.சங்கம் பெரும் புள்ளிங்க அம்புட்டுப் பேர்க்கும் வர்ற லெட்டரைப் பிரிச்சுப் படிச்சு அவங்கிளுக்குப் பதில் போடுறது அம்புட்டும் இந்தத் தொண்டர்கள் வேலைத் தானே... லெட்டரைப் பிரிச்சா.. அக்காவோட அரசியல் எதிரி யாரோ எழுதியிப்பான்(ள்) போல இருந்துச்சு..

அக்காவுக்குப் போன் போட்டா அக்கா சோறு வடிக்காம பர்கர் தின்ன கதையை வெட்டியாப் பேசி போன் பில்லை ஏத்தி விட்டிருச்சு...

அப்புறமா நாங்கப் பதட்டமா லெட்டர் மேட்டரை எடுத்து விட்டு இதுக்கு என்னப் பதில் சொல்லுரதுன்னு கேட்டோம்...

அக்கா விவரத்தை அசால்ட்டாக் கேட்டுட்டு இந்தப் பிஸ்கொத்து கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்.. என் பேன்ஸ் பதில் சொல்லுவாயங்கன்னு நச்ன்னு போனைக் கீழே வச்சுட்டாயங்க...


அக்கா பேன்ஸ்ன்னு சொன்னது தலயிலே இருக்குமே அந்த மேட்டரா இல்ல தலக்கு எல்லாமே அந்த மேட்டரான்னு நானும் பாண்டியும் பாயைப் பிராண்டி ஒரு முடிவுக்கு வர முடியாமல் அந்தக் கேள்விகளை அப்படியே சங்கப் பலகையிலே ஒட்டுறோம்ய்யா.. அக்காவோட பேன்ஸ்க்குச் சமர்ப்பணம்.

நமது புதர் கேட்கும் பத்து கேள்விகள்

1. உங்கள் பதிவு ப்ரொபைலில் இருக்கும் அந்தப் பொன் குவியலை நீங்கள் எப்படி சம்பாதித்தீர்கள்?
சங்கத்தில் களவாடிய நிதியா? இல்லை சங்கம் பெயரைச் சொல்லி நீங்கள் ஊழல் செய்த நிதியா?

2. பலப் பதிவுகளிலும் உங்களை சின்னப் பெண் எனக் கூறும் நீங்கள்.. உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சகப் பதிவாளர்களை மிரட்டி உங்களை அக்கா எனக் கூறுமாறு தொடர்ந்து பயமுறுத்துகிறீர்களாமே? இது சரியா?

3. தேர்தல் நேரத்தில் சங்கத்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக எங்குமே பிரச்சாரம் போக மறுத்து விட்டு... இப்போது மட்டும் அயல் நாட்டு சங்க வளர்ச்சி திட்டம் என்று புதிய திட்டம் வகுத்து அயல் நாடு சென்று டாலர் தேத்துவது நியாயமா?

4.புதரகத்தில் நீங்கள் மேற்கொண்டிருக்கும் அரிசி சோறு வடிப்பான் கருவி ஊழல் உண்மையா? தேவையின்றி சோறு வடிக்கும் சிறுப் பிரச்சனையைப் பெரிதாக்கி சங்கத்தாரின் பொன்னான நேரத்தை வீணானச் சோற்றுப் புராணப் பதிவுகளில் ஈடுபட வைப்பது மாபெரும் துரோகம் ஆகாதா?

5. சங்கத்தில் உங்களுக்கு பிகுலு பட்டத்துடன் வழங்கியப் பிகுலைத் தலக்கு எதிராகவே பயன்படுத்துவது.. அதாவது தல உதை பந்து விளையாடும் இடங்களில் ஒருவனைக் கூடவே தலப் பின்னால் ஓட விட்டு தலக் கைப்புப் பந்து எடுக்கும் போதெல்லாம் அவன் பிகுல் அடிப்பதைப் பார்த்து மகிழ்வது.. இது குற்றமல்லவா?

6. கைப்பொண்ணுவை வா.வ.சவில் ( சரியாகப் பார்க்கவும் வரு.வா.ச அல்ல) வா.வ.ச... இணையச் சொல்லி மிரட்டியது.. கைப்பொண்ணுக்கு மீசை முளைக்க வைத்தது.. அதற்கு விளக்கெண்ணெய் தடவியது எனக் கொடுமைகள் இழைத்தது சரியா?

7.சங்கத்துக்கு மிகவும் நெருக்கமானப் பின்னூட்ட சூப்பர் ஸ்டார் இலவசங்களின் இமயம் வாக்குறுதிகளின் வங்கி இலவசக் கொத்தனார் மீது சங்கத்திலிருந்து தட்டு முட்டுச் சாமான்களை லவட்டிச் சென்றதாய் குற்றம் சாட்டி மிரட்டியது.. இப்போது சாதம் வடிப்பது போன்ற சுமாரான சமையல் குறிப்புக்களைக் கொடுத்துவிட்டு பரோட்டாப் போடுவது எப்படி என்ற மாபெரும் சாதனைப் பதிவுப் போட்டு மீன்கொத்தி அன்பர்களின் அமோக ஆதரவு பெற்று அமைச்சரான கொத்தனாரின் உணவுத் துறை இலாகாவைக் கைப்பற்ற நீங்கள் சதி செய்கிறீர்களாமே?

8.வெண்பாவைக் கட்டாயக் கல்வியாக்கி வருத்தப் படாத வாலிபர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சியது மிகப் பெரியக் குற்றம் அல்லவா?

9.கீதா அக்காவின் ஆறு லட்சம் ரசிகர் மன்றங்களைக் கலைத்தது... இன்னும் அவருக்கென் இருக்கும் சில நூறு மன்றங்களையும் பின்னூட்டமிட்டு கலவரப் பூமியாக மாற்றுவது என பெரும் சதி திட்டம் தீட்டி வருகிறீர்களாமே?

10. எல்லாவற்றுக்கு மேலாக உங்கள் மீது கூறப் படும் குற்றச்சாட்டு சங்கத்தின் உயர்வான...உயிரான... கொள்கையான வருத்தப் படாமல் இருப்பதை மீறியது.. உங்கள்த் தனி பதிவில் மட்டுமின்றி பிற பதிவுகளிலும் சென்று 'வருத்தப்படுவதாய்' பிரகடனம் செயதிருப்பது உங்கள் இயக்கத்திற்கு இழைக்கும் கொடுந்துரோகம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

No comments:

Post a Comment