Saturday, November 12, 2011

அவைகள், உன் இறந்து போன மனைவி, மகனாகக் கூட இருக்கலாம்

நான், 29 வயது துர்பாக்கிய இளைஞன். பட்டப்படிப்பு முடித்து, நல்ல வேலையில் உள்ளேன்; என் பெற்றோரும் நல்ல வேலையில் உள்ளனர். ஒரே உடன் பிறந்த தங்கை. திருமணம் முடிந்து, இரு குழந்தை களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள். என்னுடைய, 25ம் வயதில் படிப்பு முடிந்து நல்ல வேலையில் சேர்ந்த உடன், பள்ளிப் பருவத்திலிருந்து விரும்பிய பெண்ணை இரு வீட்டார் சம்மதத்துடன் மணந்து கொண்டேன். 

அவளுடன் சந்தோஷமாக வாழ்ந்ததின் பலனாக, அடுத்த வருடமே ஓர் ஆண் குழந்தைக்கு தந்தையானேன். என் மனைவியை, என் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அனைவரும் சந்தோஷமாக, ஒரே குடும்பமாக வசித்து வந்தோம். என்னுடைய, 27ம் வயதில் எங்கள் சந்தோஷத்தை கண்டு பொறாமை கொண்ட கடவுள், ஒரு பேருந்து விபத்தில், என் மனைவியையும், குழந்தையும் எடுத்துக் கொண்டான். தற்போது, இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோரும், உறவினர்களும் கட்டாயப்படுத்துகின்றனர்; எனக்கு அதில் துளியும் விருப்பமில்லை. வம்ச விருத்திக்காகவாவது நான் மறுமணம் செய்து கொள்ள வேண்டுமாம்.
நான் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்கிறேன். எனக்கு இன்னும் வயதும், இளமையும் உள்ளதாக கூறுகின்றனர். அதற்காகவே திருமணம் செய்து கொண்டாலும், என்னால் உண்மையான கணவனாக இருக்க முடியாது என்று கருதுகிறேன். நான் மேற்கொண்டு என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருக்கிறேன். தங்களது மேலான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.

எனக்கு வாழ்வு சிக்கிரம் முடிய வேண்டும் என, எண்ணுகிறேனே ஒழிய, தானாக போக்கிக் கொள்ளும் எண்ணம் அறவே இல்லை. 

— இப்படிக்கு,

அன்புள்ள மகனுக்கு —
காதல் மனைவியையும், அருமை மகனையும் இழந்த உன்னை, இரண்டாம் திருமணம் செய்ய துரத்துகின்றனர் இல்லையா?

ஆலோசனை கூறுவதற்கு முன், உன்னிடத்தில் என்னை பொருத்தி பார்த்தேன். மனைவி, மகனை இழந்த துக்கம் முகத்தில் பேய் தனமாக அறைகிறது. வாழ்க்கையே சூன்யமாக தெரிகிறது. வெட்டுண்ட பல்லி வால் போல் துள்ளத் துடிக்கிறேன். ஜல்லி சிமென்ட் சுழற்றும் இயந்திரத்திற்குள் என் இதயம்.

ஒரே ஒரு நொடி உன்னிடத்தில் என்னை பொருத்தி பார்த்ததற்கு இத்தனை தாக்கம் என்றால், ஆயுளுக்கும் அதே சோகத்தில் நீடித்து நிற்கப் போகும் உனக்கு எத்தனை தாக்கம் இருக்கும்?

எல்லாரும் போடும் கணக்குகளுக்கு தனித்தனி விடை அறிவிக்கும் கணித மாமேதை கடவுள். மனிதராய் பிறக்கும் எல்லாருக்கும் யவ்வனமான, ஆரோக்கியமான, பொருளாதார ஏற்ற தாழ்வற்ற நூறாண்டு ஆயுள் வழங்க வேண்டியதுதானே கடவுள்? அப்படிபட்ட உலகை படைக்க கடவுளுக்கு சக்தி இல்லையா? முந்தைய பிறவியின் பாவ புண்ணியத்தை நேர் செய்ய வந்து போனாளோ உன் மனைவி? இனி, உன் மகனாய் பிறந்த ஒரு வயது குழந்தைக்கு பிறவிகள் இல்லாமல் இறைவனோடு இணைந்து போனானோ? மரணத்திற்கு நாம் சொல்லும் பொருள் கடவுளின் அகராதியில் இல்லையோ? தான் நேசிப்பவர்களை கொடுக்காமல், ஆசிர்வதிக்கிறான் இறைவன்; தான் வெறுப்பவர்களை கொடுத்து தண்டிக்கிறான். அப்படித்தானோ உன் கதை? வெட்டுக் குத்தில்லாமல் நிறைவேறிய காதல் திருமணம், அரை நூற்றாண்டு தொடர்வது ஆண்டவன் பார்முலாவிற்கு எதிரானதோ?

அழகான மனைவி இருக்க, வெளியில், நான்கு பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொள்கிறான் கணவன். கள்ளக் காதலியை மகிழ்விக்க, மனைவியை கொல்ல வாடகைக் கொலையாளி அமர்த்துகின்றான் கணவன். கள்ளக் காதலுக்கு தொல்லையாக இருக்கும் குழந்தையை, விஷம் வைத்துக் கொல்கிறான்(ள்) கணவன் - மனைவி. இப்படி, ஆயிரம் துரோக முடிச்சுகள் ஆண் - பெண் உறவுகளில் காணப்படுகின்றன. நீ இந்த முடிச்சுகளுக்கு விதிவிலக்கான ஆண்.

உன் திருமண வாழ்க்கை, இரண்டே ஆண்டுகள் நீடித்திருக்கிறது. மனைவி - மகன் மரணத்திற்கு பிறகு, இரண்டு ஆண்டுகள் தன்னந்தனியனாய் உழன்று வருகிறாய். உனக்கு தற்கொலை எண்ணம் அறவே இல்லை என்பது பெரும் ஆறுதல். இன்னும், 41 - 45 ஆண்டுகள் நீ உயிர் வாழப் போவதாய் வைத்துக் கொள். மறுமணம் இல்லாது எப்படி காலத்தை ஓட்டுவாய்? பத்து வருடங்கள் திருமணம் வேண்டாம் என்று இருந்துவிட்டு, 40 வயதுக்கு மேல் திருமண ஆசை வந்தால் என்ன செய்வாய்? உன் மறுமணம், உன் காதல் மனைவிக்கு நீ செய்யும் துரோகமல்ல. மாற்றாக, உன் திருமணத்தில் அவளது ஆத்மா நிம்மதி பெருமூச்சு விடும்.

தாம்பத்யம் ஓர் உயிரியல் கட்டாயம். அதை, நீ செயற்கையாக கட்டுப்படுத்த ஒரு கட்டத்தில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். விளைவுகள் உன்னையும், உன் குடும்பத்தையும் பெரிதும் பாதிக்கும்.

பிரவீணா மரணத்திற்கு பின், பூர்ணிமா ஜெயராமை மணந்து, வாழ்க்கையை பாக்யராஜ் அர்த்தப்படுத்திக் கொள்ளவில்லையா? சரண்யா, சாந்தனு என்று, இரு மணி, மணியான குழந்தைகளை பெற்றுக் கொள்ளவில்லையா?

ஈ.வெ.ரா., தள்ளாத வயதில், மணி அம்மையாரை மணந்து கொள்ளவில்லையா? நபிகள் நாயகம், கதீஜா அம்மையார் மரணத்திற்கு பிறகு, மறுமணம் செய்து கொள்ளவில்லையா?

மறுமண தேவை ஆளுக்கு ஆள், வயதுக்கு வயது, தகுதிக்கு தகுதி, மதத்திற்கு மதம் மாறுபடும். உன்னைப் பொறுத்தவரைக்கும், உனக்கு மறுமணம், நூறு சதவீதம் தேவை.

குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என நீ நினைப்பது, "பெனடிக்'கான விஷயம். நீயும் சிரமப்பட்டு, தத்து குழந்தையையும் சிரமப்படுத்துவாய். உன்னையையே கவனிக்க ஆளில்லாத போது, உன் தத்துக் குழந்தையை யார் கவனிப்பது? கல்யாணமாகி, 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை, செயற்கை கருத்தரிப்பும் சாத்தியம் இல்லை, ஒரு குழந்தையை தத்தெடுப்போம் என ஒரு தம்பதி சொல்வது வேறு; நீ சொல்வது வேறு.

மறுமணம் செய்து கொண்டால், வரும் மனைவிக்கு உண்மையான கணவனாக இருக்க முடியாது என கருதுகிறாய்; இது, உண்மை அல்ல. புது மனமும், மனமும் இணைந்து விட்டால், புது உடலும், உடலும் இணைந்து விட்டால், கணவன் மனைவிக்குள் உண்மை பூத்துக் குலுங்கும்.

மனித எண்ணங்கள் நிலையானவை அல்ல. மனித மனம் சீதோஷ்ண நிலை போன்று நிமிடத்திற்கு, நிமிடம் மாறக் கூடியது. இன்று, உனக்கு வறண்ட வானிலை; நாளை, ஆலங்கட்டியுடன் கூடிய கனமழை பெய்யும்.

காமத்தை அடக்கினால், அது உன் கேரியரை பாதிக்கும்; நாளடையில் காம விகாரங்கள் பெருகும்.

விழித்துக் கொள்.

படித்த, பணிக்கு செல்லும் விதவனை புரிந்து கொள்ளக்கூடிய மனப்பக்குவம் பெற்ற, 25 வயது பெண்ணை, ஆற அமர தீர விசாரித்து, திருமணம் செய்து கொள் மகனே.

அடுத்தடுத்து உனக்கு, இரு குழந்தைகள் பிறக்கும். அவைகள், உன் இறந்து போன மனைவி, மகனாகக் கூட இருக்கலாம். வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment