Thursday, June 9, 2011

கூகுள் மொபைல் மணிபர்ஸ்




சில்லரை வர்த்தகத்தில் கூகுள் பெரிய புரட்சி ஒன்றை மேற்கொள்ளத் தொடங்கி யுள்ளது. கூகுள் வாலட் (Google Wallet) என்ற பெயரில், உங்கள் மொபைல் போனை மணி பர்ஸாக மாற்றுகிறது. இதன் மூலம்,கடைகளில் பொருள் வாங்கிய பின், அங்குள்ள சாதனம் ஒன்றின் முன், உங்கள் மொபைல் போனை அசைத்தால் போதும்; உங்கள் கணக்கில் உள்ள பணத்திலிருந்து பில்லுக்குத் தேவையான பணம், கடைக்காரர் அக்கவுண்டிற்குச் செல்லும். உங்கள் மொபைல் போனுக்கு அதற்கான ரசீது கிடைக்கும். கடைக்காரர் இந்த விற்பனைக்கென ஏதேனும் டிஸ்கவுண்ட், பரிசு கூப்பன் தருவதாக இருந்தால், அதுவும் மொபைல் போனில் பதியப்படும். இதனை அடுத்ததாக அந்தக் கடையில் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். இந்த சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பத்தின் பெயர் NFC (Nearfield communication). இதன் அடிப்படையில் இயங்கும் இரு சிப்களை, இரண்டு சாதனத்தில் அமைத்து அருகே வைத்து இயக்குகையில், அவை இரண்டும் தாங்களாகவே, தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். கிரெடிட் கார்ட் தகவல்கள், ட்ரெயின் டிக்கட், கூப்பன்களில் உள்ள பார் கோட் தகவல்கள் போன்ற தகவல்களை எளிதாக இவை கையாளும். இந்த சிப்களை இனி வெளியாகும் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களிலும் வைத்திட கூகுள் முடிவு செய்துள்ளது. 
முதலில் ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல் படும் நெக்சஸ் எஸ் மொபைலில் இது செயல்படும். முதல் முறையாக அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ மற்றும் நியூ யார்க் நகரங்களில் இது சோதனை செய்யப்படுகிறது. பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மற்ற நகரங்களுக்கு விரிவாக்கப்படும். பின்னர், அனைத்து நாடுகளின் முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்படும். அமெரிக்காவில் பல வர்த்தக நிறுவனங்களும், கிரெடிட் கார்டுகளை வழங்கும் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் இதற்கென கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தங் களை மேற்கொள்கின்றன. பன்னாட்டளவில் மூன்று லட்சம் வர்த்தக நிறுவனங்கள் இதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன்வந்துள்ளதாகவும் கூகுள் அறிவித்துள்ளது. சாம்சங், மோட்டாரோலா, எச்.டி.சி. நிறுவனங்கள் தங்கள் மொபைல் போன்களில் இதனை அறிமுகப்படுத்த ஒத்துக் கொண்டுள்ளன. ஏற்கனவே இந்த தொழில் நுட்பத்தினை Microsoft, Visa, Sony, Nokia and AT&T ஆகிய நிறுவனங்கள் சப்போர்ட் செய்து வருகின்றன. என்.எப்.சி. தொழில் நுட்பம் இனி ஸ்மார்ட் போன்களில் ஒருங்கிணைந்த ஒரு வசதியாக கருதப்படும். 

இனி ட்ரெயின், பஸ் அல்லது விமானப் பயணங்களுக்கு, இன்டர்நெட் மூலம் டிக்கட் எடுத்து, அதனை அச்செடுத்து, மறந்துவிடாமல் எடுத்துச் செல்லும் வேலை எல்லாம் இருக்காது. மொபைல் மூலமாகவே இன்டர்நெட்டில் டிக்கட் எடுத்து அதனைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். பின்னர், ஏறிச் செல்லும் வாகனங்களில் கதவுகளில் பதிந்து வைக்கப் பட்டுள்ள சாதனத்தின் முன், மொபைல் போனை ஆட்டிவிட்டு உள்ளே செல்லலாம். 

கடைகளில் பொருட்களை வாங்கிய பின்னர், மொபைல் போனை காசு வாங்கும் இயந்திரத்தின் முன் அசைத்துவிட்டு, ரசீது பெற்று பொருளை எடுத்துச் சென்றுவிடலாம். 
பணம் மட்டுமின்றி, வாகன ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை போன்றவற்றையும் இதில் கொண்டு வர கூகுள் திட்டமிடுகிறது.

இதில் மோசடி நடக்காமல் இருக்க அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கூகுள் கொண்டு வந்துள்ளது. மொபைல் போனில் இது இருந்தாலும், போன் இயக்கத்துடன் கலக்காமல் தனி சிஸ்டம் மற்றும் மெமரியில் என்.எப்.சி. சிப் இயங்கும். போன் இயக்கத்திற்கென ஒரு PIN எண்ணும், மொபைல் மணி பர்ஸுக்கென இன்னொரு PIN எண்ணும் பயன்படுத்த வேண்டும். 

கூகுளின் இந்த புதிய நிதி வர்த்தக நடவடிக்கை அதனுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் மற்றும் அவை இயங்கும் மொபைல் போன்களைப் பயன்படுத்து பவர்களை அதன் வளையத்திற்குள் கொண்டு வரும். வர்த்தகத்தில் ஈடுபடாமலேயே, பன்னாட்டளவில் பெரிய வர்த்தக நிறுவனமாக கூகுள் மாறும். இந்த துறையில் தங்களின் பங்கினையும் மேற்கொள்ள நிச்சயம் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்பத்தினைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். அதிக எண்ணிக்கை யில் நிறுவனங்கள் வந்தால், நமக்கு லாபம் தானே.

No comments:

Post a Comment