Sunday, June 26, 2011

பழகியவர்களைப் பிரிந்து செல்ல மனம் வரவில்லை.

நான் ஒரு சீனியர் சிட்டிசன். பெற்றோருக்கு ஒரே புதல்வனாகப் பிறந்து, செல்லமாக, தனிமை வாழ்க்கையே வாழ்ந்தேன். பட்டப்படிப்பு முடிந்த வுடன் திருமணம்; அழகான, அன்பான மனைவி. அவள் வந்தபின் வாழ்வே வசந்தமானது; பொருளாதார நிலையும் பெரும் ஏற்றமடைந்தது. ஒரு ஆண், மூன்று பெண் என, குழந்தைகள் பிறந்து, தனி மரம் தோப்பானது. செல்வச் செழிப்புடனே பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி, அவரவர் குழந்தைகளுடன், என் பெற்றோர் சேர்ந்து வாழ்வே மிகவும் இன்பமயமாகச் சென்றது.
யார் கண் பட்டதோ, என் மகனின் ஊதாரித்தன மான செயல்களால், குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. இருந்தாலும், எல்லாவற்றையும் என் தந்தை பொறுமையுடன் கையாண்டார். என் மணிவிழாவிற்குப் பின், பெரும் புயல் வீசி, நான் தற்போது திக்குத் தெரியாத காட்டில் சிக்கித் தவிக்கிறேன். என் மகனின் ஊதாரித்தனத்தால் பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டது. மிகவும் மென்மையான குணம் படைத்த என் தந்தை, மனம் வெதும்பி மரணமடைந்தார். அவரை இழந்த, 15வது நாளில், என் தாயையும் இழந்தேன். எல்லாவற்றிற் கும் சிகரம் வைத்தது போல் என் குடும்பத் தூணாக இருந்த, என் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்தாள். இரண்டு வருடங்களில் என் மேல் அக்கறை கொண்ட மூவரையும் இழந்து, நடை பிணமானேன்.

இதன் பின்னும், என் மகன் தன்னை மாற்றிக் கொள்ளாமல் நடந்ததால், பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டது. அதை நான் கண்டித்ததால், என்னை எதிரியாக நினைத்து, மிகவும் தரக் குறைவாகப் பேசுவதுடன், சொத்து ஒன்றையே குறிக்கோளாக நினைத்து, என்னைத் தனிமைப்படுத்தி, எல்லாத் தொல்லைகளையும் கொடுக்கிறான். பெற்ற மகன் இருந்தும், எந்தத் துணையுமின்றி, முதுமையில் தனிமைக் கொடுமையை அனுபவித்து வருகிறேன்.
பெண் பிள்ளைகள் ஆதரவு காட்டினாலும், அவர்களுடன் சேர்ந்து இருக்க மனமில்லை. ஏதாவது இல்லத்தில் சேர்ந்து விடலாமென்றால், என் சொந்த ஊரை, மற்ற உறவினர்களை, பழகியவர்களைப் பிரிந்து செல்ல மனம் வரவில்லை. உதவிக்கு ஆட்களை வைத்துக் கொள்ள நினைத்தால், யாரும் கிடைக்கவில்லை. யாராவது, ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற விதவைகளையோ, விவாகரத்துப் பெற்றவர்களையோ துணைக்கு வைத்துக் கொள்ளலாமென்றால், மற்றவர்கள் என்ன நினைப்பரோ என்ற தயக்கம் ஏற்படுகிறது. இந்தச் சகோதரன், மீதி நாட்களை அமைதியாக கழிக்க, வழிகாட்டும்படி அன்புடன் வேண்டுகிறேன்

அன்புள்ள சகோதரருக்கு —

உங்களது அனாதரவான நிலையை உங்கள் கடிதம் மூலம் அறிந்தேன். எனினும், உங்களது கடிதத்தில் கீழ்கண்ட விவரங்கள் இல்லை.

1.உங்களின், உங்களின் பெற்றோர், மனைவி, மகன், மகள்கள் வயது விவரம்.

2.நீங்கள் என்ன பணி செய்தீர்கள், ஓய்வூதியம் கிடைக்கிறதா?

3.குடும்பத் தொழில் என்ன செய்தீர்கள்?

4.சொத்துகளை பிரித்துக் கொடுத்து விட்டீர்களா? பிரிந்து கொடுத்திருந்தால், உங்களுக்கென்று தனியாக பங்கு பிரித்திருக்கிறீர்களா? சொத்துகளை பாகப் பிரிவினை செய்தீர்களா, தானமாக எழுதிக் கொடுத்தீர் களா?

5.உங்கள் மகன் என்ன வகையான ஊதாரித்தனம் செய்தார்?

6.ஓய்வூதியம் தவிர, உங் களுக்கு வேறுவிதமான வருமானம் உள்ளனவா?

7.உங்களது ஊதாரி மகன் என்ன வகையான தொல்லைகள் கொடுக்கிறார்?

8.உங்களின் சொந்த ஊர் எது?

9.நீங்கள் இந்து மதத்தின் எந்த உட்பிரிவைச் சேர்ந்தவர்?

10.உங்களின் மகனின் ஊதாரித்தனமான நடத்தைக்கு, நீங்கள் ஏதாவது ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்கிறீர்களா?

மேற்சொன்ன விவரங்களும் உங்கள் கடிதத்தில் இருந்திருந்தால், உங்களது கடிதத்திற்கு இன்னும் சிறப்பான ஆலோசனை வழங்கி இருப்பேன்.

உங்களது தந்தை காலத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்திருக்கிறீர்கள். அப்போது, எல்லா பிரச்னை களையும் உங்களது தந்தையே கையாண்டிருக்கிறார். அந்த சமயத்தில், நீங்கள் குடும்ப நிர்வாக சிக்கல்களில் சிக்காமல், சுதந்திரமாக இருந்திருக்கிறீர்கள். உங் களது தந்தையின் மரணத்திற்கு பின், உங்கள் மகன் மீதான கட்டுப்பாட்டை முழுமையாக இழந்துள்ளீர் கள். உங்களது மகனுக்கு, நாற்பது வயது இருக்கக் கூடும். இனி, பட்டு திருந்துவார் என நம்புகிறேன்.

இனி, உங்களின் பிரதான கேள்விக்கு வருவோம்...

ஆதரவற்ற விதவைகளையோ, விவாகரத்து பெற்றவர்களையோ அல்லது வேலையாள் ஒருவரையோ துணைக்கு வைத்துக் கொள்ள நினைக்கிறீர்கள். இந்த இடத்தில், துணைக்கு என்றால் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என நினைக்கிறீர்கள்.

வருடத்தை மூன்றாக பிரித்து, நான்கு மாதங்களுக்கு ஒரு மகள் வீட்டில் தங்கலாம் நீங்கள்; தங்குவதற்கு பணம் அளிக்கலாம்.

காவல் துறையின் அங்கீகாரம் பெற்ற ஏஜென்சி மூலம், பணிப் பெண்ணை அமர்த்திக் கொள்ளலாம்.

மறுமணம் செய்வது உங்களது திட்டமென்றால், உங்களது மகள்களிடம் கலந்து ஆலோசித்துக் கொள்ளுங்கள். உங்களது மறுமணம், உங்களது ஊதாரி மகனை மறை முகமாக பழிவாங்க என்றால், மறுமணம் வேண்டாம். விவாகரத்து பெற்றவர்களை விட, ஐம்பது வயது விதவைப் பெண்ணை தேர்ந் தெடுப்பது நல்லது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் விதவைப் பெண், உடல் ஆரோக்கியம் பெற்றவராக இருப்பது நல்லது.

உங்களது வயது, 63 என்றால், இன்னும், 25 ஆண்டுகள் உயிர் வாழ்வீர்கள் என வைத்துக் கொள்வோம். 25 து12 = 300 மாதங்கள். ஒரு மாதச் செலவு, 15,000 - 20, 000 ரூபாய் என கொள்வோம். முன்னூறு மாதங்களுக்கு, அறுபது லட்சம் ரூபாய் ஆகிறது. 

ஒன்று, நீங்கள் மறுமணம் செய்து கொள்ள உங்களிடம், அறுபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தோ அல்லது மாதம், இருபதாயிரம் நிலையான வருமானமோ இருக்க வேண்டும். சரியாக பெண்ணை தேர்ந்தெடுக்கவில்லை என்றால், வரும் பெண் உங்களது மகனை விட, பத்து மடங்கு அதிகம் தொல்லைக் கொடுப்பார்; ஜாக்கிரதை. விதவைப் பெண்ணை உங்களது சொந்த ஊரில், சொந்தத்தில் தேடுங்கள். உங்களிடம் தாம்பத்யம் மேற்கொள்ளும் திடமிருந்தால், தாம்பத்யம் தேவைப்படும் பெண்ணை தேர்ந்தெடுங்கள்; தாம்பத்யம் பண்ணும் திறனை உடலாலும், மனதாலும் இழந்திருந்தீர்கள் என்றால் தாம்பத்யம் தேவைப்படாத பெண்ணை தேர்ந்தெடுங்கள். ஒரு விஷயம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்... உங்களை கருவறையில் சுமந்த தாய் போல, உங்களை கருவறைக்கு வெளியே சுமந்த மனைவி போல ஒரு பெண் கிடைக்கவே மாட்டாள்.

No comments:

Post a Comment