Tuesday, June 21, 2011

இதயத்தைப் பறி கொடுத்த மாணவி

ரயிலில் உட்கார துண்டு போட்டு இடம் கொடுத்த போர்ட்டர் மீது ஒரு தலைக் காதல் கொண்ட கல்லூரி மாணவி, வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறேன், ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டதால் அந்த போர்ட்டர் அதிர்ச்சியாகி போலீஸாரிடம் முறையிட்ட கதை திருச்சியில் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஏழைத் தம்பதியின் மகள் ரஞ்சிதா. 19 வயதான இவர்தான் அந்த வீட்டில் முதல் முதலில் பிளஸ்டூ பாஸ் செய்தவர். தற்போது திருச்சியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

தினசரி மணப்பாறையிலிருந்து ரயில் மூலம் திருச்சி வந்து கல்லூரிக்குப் போய் விட்டு மாலையில் ஊர் திரும்புவார் ரஞ்சிதா. 

அவருக்கு கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த, திருச்சி ரயில் நிலையத்தில் போர்ட்டராக பணியாற்றும் ஒருவர், ஒரு நாள் ரயிலில் உட்கார துண்டு போட்டு இடம் பிடித்துக் கொடுத்தார். இதில் அவர்களுக்குள் நட்பு ஏற்படவே, தினசரி அவர் ரஞ்சிதாவுக்கு துண்டு போட்டு இடம் பிடித்துக் கொடுக்க ஆரம்பித்தார்.

தன் மீது அந்த போர்ட்டருக்கு தனிப் பிரியம் ஏற்பட்டதாக உணர்ந்த அந்தப் பெண், போர்ட்டரை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இது போர்ட்டருக்குத் தெரியாது. 

தினசரி அந்த போர்ட்டரைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை ரஞ்சிதாவால். அவர் ஒரு நாள் வராவிட்டாலும் கூட மனசு ஒரு மாதிரி ஆகி விடுமாம். இந்த நிலையில், ரஞ்சிதா ஏழைப் பெண் என்பதால் அவ்வப்போது பேனா உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுப்பார் அந்த போர்ட்டர். இதை காதல் பரிசாக நினைத்துக் கொண்ட ரஞ்சிதா, போர்ட்டர் மீதான காதலை வலுவாக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் ஒரு நாள் போர்ட்டரைப் பார்த்து நான் உங்களை காதலிக்கிறேன் என்று கூற அவருக்கு ஒன்றும் புரியவில்லை. நான் உங்களைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். வீட்டை விட்டு வந்து விடுகிறேன். நாம் ஓடிப் போய் விடலாம் என்று கூற போர்ட்டருக்கு பெரும் அதிர்ச்சியாகி விட்டது.

இப்படிச் சொல்லிய அடுத்த நாள் இரவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து போர்ட்டருக்குப் போன் செய்து நான் வந்து விட்டேன் என்று அவர் கூற போர்ட்டர் விரைந்து வந்து தனது நிலையைக் கூறியுள்ளார். நான் ஒருபோதும் உன்னைக் காதலிக்கவில்லை என்று விளக்கியுள்ளார். இதைக் கேட்டதும் ரஞ்சிதா அழ ஆரம்பித்து விட்டார்.

இதைப் பார்த்த மகளிர் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து என்ன ஏது என்று விசாரித்துள்ளனர். போர்ட்டர் நடந்ததை விளக்கிக் கூற ரஞ்சிதாவின் ஒரு தலைக் காதல் குறித்து போலீஸாருக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து ரஞ்சிதாவின் குடும்பத்திற்குத் தகவல் தெரிவித்து பெற்றோரை வரவழைத்தனர். அவர்களும் அழுதபடி ஓடி வந்தனர்.

பின்னர் காவல் நிலையத்தில் வைத்து ரஞ்சிதாவுக்கு போலீஸார் புத்திமதி கூறினர். இதையடுத்து தனது பெற்றோருடன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

No comments:

Post a Comment