Tuesday, June 21, 2011

14 வயது மாணவி கற்பழிப்பு: குமரி அதிகாரிகள் பட்டியல் தயார்-அதிகாரிகள் தலைமறைவு

14 வயது மாணவி பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்ட குமரி மாவட்ட அதிகாரிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் 2 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இதில் கைது நடவடிக்கை இருக்கும் என்பதால் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலரும் தலைமறைவாகி உள்ளனர். 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 14 வயது மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் எர்ணாகுளம் குற்றப்பிரிவு எஸ்.பி. சுரேநதிரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. சுமார் 100 பேர் வரை மாணவியை பலாத்காரம் செய்ததாக எர்ணாகுளம் குற்றப்பிரிவு போலீசார் பட்டியல் தயாரித்துள்ளனர்.

இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் குமரி மாவட்டம் பளுகல் பகுதியைச் சேர்ந்த கான்டிராக்டர் மணிகண்டனும் ஒருவர் ஆவார். அவர் தற்போது கேரள மாநிலம் அலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கேரள தனிப்படை போலீசுக்கு கிடைத்துள்ளது. மாணவியை தான் மட்டும் பலாத்காரம் செய்ததோடு தன்னோடு நெருக்கமாக இருந்த அதிகாரிகள் பலருக்கும் மணிகண்டன் சப்ளை செய்துள்ளார்.

ஒரு நாளைக்கு ரூ. 45 ஆயிரம் வீதம் மாணவியின் தந்தை சுதீருக்கு கொடுத்து விட்டு மாணவியை மணிகண்டன் குமரி-கேரள எல்லையான கார்கோணத்தில் அமைந்துள்ள தனது சொகுசு பங்களாவுக்கு அழைத்து வந்துள்ளார். இந்த சொகுசு பங்களாவில் வைத்துதான் முக்கிய அதிகாரிகளு்ம் மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். இந்த அதிகாரிகள் பட்டியலில் காவல் துறை அதிகாரிகள், கலெக்டர் அலுவலக அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணி துறையினரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் மொத்தம் 70 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குமரி மாவட்ட அதிகாரிகள் பெயர்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இன்னும் 2 நாளில் விசாரணையின் முதற்கட்ட அறிக்கையை தனிப்படை போலீசார் அளிக்க உள்ளனர். அதில் இடம் பெற்றுள்ளவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது. இதனால் குமரி மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் பலர் தலைமறைவாகிவிட்டனர்.

No comments:

Post a Comment