Saturday, April 9, 2011

பொடுகுத் தொல்லை போயே போச்சு!


ப்போதெல்லாம் வெளிர் பழுப்பு, அடர் பழுப்பு போன்ற நிறங்களில் கல்லூரி மாணவிகள் தங்களின் கூந்தல் நிறத்தை மாற்றிக் கொள்கிறார்கள். அது ஃபேஷனாக இருந்தாலும், முறையான பராமரிப்பின்றி அந்தக் கூந்தல் அதே நிறத்தில் வெளிறிப் போகும்போது ‘செம்பட்டை முடி’ என்றே அழைக்கப்படுகிறது.
‘‘ஜீவனே இல்லாமல் வறண்டு போயிருக்கும் இப்படிப்பட்ட முடியை உடையவர்கள் ‘தங்கள் கூந்தலும் ஒருநாள் அலையலையாய்ப் புரளுமா?’ என்று கவலைப்படுவார்கள். அந்தக் கவலைக்குத் தீர்வு உண்டு’’ என்கிறார், ‘அவள்’ வாசகிகளுக்காக அழகு டிப்ஸ்களை வழங்கிவரும் சந்தியாசெல்வி.
இந்த இதழில் அவர் பேசப்போவது, கூந்தல் பராமரிப்பு பற்றி!
cக்கு உடனடியாக ஆரோக்கியத் தோற்றம் தரவைக்கச் சுலபமான சிகிச்சை ஒன்று உண்டு.
பீட்ரூட்-1, மருதாணி-1 கப், கத்தா (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) – 2 கப், வெந்தயப் பவுடர் – 2 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள்.
முதலில் பீட்ரூட்டை மசிய அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து அதில், பீட்ரூட், கத்தா, வெந்தயப் பவுடர் போட்டு மூடி வைத்து இறக்குங்கள். இதன் சாறு தண்ணீரில் இறங்கி விடும். வெதுவெதுப்பு நிலையை அடைந்ததும் இந்தத் தண்ணீரை வடிகட்டி, மருதாணிப் பவுடர் கலந்து ஒரு இரவு வையுங்கள்.
மறுநாள் இந்தக் கலவையை கூந்தல் முழுக்கவும் பூசி, ஒரு மணி நேரம் கழித்துத் தலையை அலசுங்கள். தொடர்ந்து இப்படி நாலைந்து தடவை செய்தாலே கூந்தலின் நிறத்தில் நல்ல வித்தியாசம் தெரியும்.
‘இதையெல்லாம் செய்ய எங்களுக்கு நேரம் ஏதுங்க?’ என்பவர்களுக்கு கொஞ்சம் சுலபமான வைத்தியம் உண்டு. தேங்காயை நன்றாக அரைத்து, பால் எடுத்து, கூந்தலில் தேய்த்து, அரைமணி நேரம் கழித்துத் தலையை அலசுங்கள். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் கூந்தல் பளபளக்கும்
.
குழந்தைகள் நீச்சல் குளத்தில் நீந்தும்போதும்கூட தண்ணீரில் குளோரின் கலந்திருப்பதால் முடி செம்பட்டையாகும். ஒவ்வொருமுறை நீந்தியபிறகும் முடியை நல்ல தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். தலைக்கு ‘ஷவர் கேப்’ எனப்படுகிற சிறு தொப்பி அணிந்தும் நீந்தலாம்.
முடி கருகருவென்று வளர்வதில்லை என்பது நிறையப் பேரின் கவலை. இதற்கு சுலபமான சில கை வைத்தியங்கள் உண்டு.
சோற்றுக் கற்றாழையை வெட்டி, வெந்தயத்தை அதன் வெள்ளைப் பகுதியில் தூவி, மூடி வையுங்கள். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்துப் பார்த்தால் வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை எடுத்து, நிழலில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு, இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் முடி கருகருவென்று வளரும். இது உடலுக்குக் குளிர்ச்சியும்கூட. சைனஸ், தலைவலி இருப்பவர்கள் மட்டும் இதைத் தேய்க்கக்கூடாது.
அவர்களுக்கான இன்னொரு வைத்தியம் சொல்லட்டுமா?
கறிவேப்பிலையையும் பெரிய நெல்லிக்காயையும் நன்கு அரைத்து வடை மாதிரி தட்டிக் கொள்ளுங்கள். இந்த வடைகளைச் சுத்தமான தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் இரண்டு வாரம் வையுங்கள். பச்சை நிறத்தில் கிடைக்கிற அந்தத் தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால், கன்னங்கரேலென்ற அழகு கூந்தல் கிடைக்கும்.
பொடுகுத் தொல்லை பெரும் தொல்லை. ஒருநாள் தலையை அலசவில்லையென்றால்கூட அரிப்பெடுத்து, காலி பண்ணிவிடும். இந்தப் பொடுகைக் காலி பண்ண சில டிப்ஸ்..
வசம்பைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலைப்பகுதியில் படும்படி தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து அலசி வந்தால் பொடுகு ஓடிப்போகும்.
தேங்காய் எண்ணெயுடன் வேப்பம்பூவைக் காய்ச்சி இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வருவதும் நல்ல பலன் தரும்.
இன்னொரு வழியும் உண்டு. வேப்பிலை, வசம்பு, வால் மிளகு மூன்றையும் நன்கு அரைத்து, மயிர்க்கால் களிலும் தலையிலும் படும்படி, தடவி அரைமணி நேரம் கழித்துத் தலையை அலசுங்கள்.
‘‘அட.. இப்போல்லாம் நீங்க தலையில கை வைக்கிறதே இல்லையே..?!’’ என்று அக்கம்பக்கத்துத் தோழிகள் ஆச்சரியப்படுவார்கள்.
———————————————————

No comments:

Post a Comment