Saturday, January 8, 2011

மலையாளிகளால் அரபுகளுக்கு ஆபத்து : துபாய் காவல் துறை தலைவர் அதிரடி பேட்டி





 வளைகுடாவில் நாள் தோறும் வேலை வாய்ப்புக்காக வரும் வெளிநாட்டவர்களால் வளைகுடாவின் மண்ணின் மைந்தர்களான அரபு மக்கள் ஒதுக்கப்படும் அபாயம் உள்ளதாக சொல்லப்படுவதை தாம் ஆதரிப்பதாக துபாய் காவல் துறை தலைவர் தெரிவித்தார்.


வெளிநாட்டவர்களை கட்டுபடுத்த சட்டம் கொண்டு வரப்படவில்லையெனில் அரபு மக்கள் தங்கள் மண்ணில் சிறுபான்மையினராக வாழும் நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று துபை காவல்துறை தலைவர் தஹி கல்பான் கத்தார் தொலைக்கட்சியில் பிரபலமான லகும் அல் கரார் (உங்கள் முடிவு என்ன?) எனும் நிகழ்ச்சியில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கூறினார்.

“அதிகரித்து வரும் வெளிநாட்டவர்களால் வளைகுடாவின் அடையாளத்திற்கும் கலாச்சாரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் அப்படி ஏற்படாமல் தடுக்க அரசாங்கங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்” எனும் தலைப்பில் தன் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டு கொண்ட போது வளைகுடாவில் உள்ள அரசாங்கங்கள் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த துணிச்சலான முடிவுகளை மேற்கொள்ளாவிடில் அமெரிக்காவில் சிவப்பிந்தியர்கள் வெள்ளையர்களால் ஒடுக்கப்பட்டதை போல் அரபுகள் தங்கள் மண்ணில் ஒடுக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் போகும் அபாயம் உள்ளது என்று கூறினார்.


தஹி கல்ஹான் மேலும் கூறும் போது குறிப்பாக அரபுகள் மலபாரிகளையும் (மலையாளிகளை குறிக்க அரபுலகில் பயன்படுத்தப்படும் வார்த்தை) ஈரானிகளையும் உற்று நோக்க வேண்டும். அவர்கள் அரபு நாடுகளில் வந்து சிறு கடைகளை திறந்து காலப்போக்கில் அரபுகளை விட வசதியான மில்லியனர்களாக மாறிவிடுகிறார்கள் என்று சொன்னார். மேலும் தஹி கல்ஹான் கூறும் போது அடிப்படையில் அரபுகளுக்கு சொந்தமான இக்கடைகளை அரபுகளே நடத்தலாமே என்று கேள்வி எழுப்பியவர் ஆனால் அரபுகள் வேலை செய்ய விரும்பவில்லை என்றும் கூறினார்.

வளைகுடாவிற்கு வேலைக்கு வரும் ஒரு இந்திய டிரைவர் சிறிது காலத்திலேயே தன் சொந்தக்காரர் ஒருவரை வேலை இல்லையென்றாலும் வளைகுடாவிற்கு அழைத்து கொள்கிறார். பின் அவருக்காக எப்படியோ அலைந்து வேலை வாங்கி கொடுத்து விடுகிறார். அவர் இன்னொரு ஆளுக்கு என்று வரையறையின்றி தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று கூறிய தஹி கல்ஹான் அமைச்சகங்கள் ஆட்சியாளர்களுக்கு  இவ்வபாயங்களை எடுத்து கூறி வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இது போன்ற கருத்துக்கள் புதியது அல்ல என்றாலும் உயர் அரசு பொறுப்பில் இருப்பவர் இப்படி பேசியுள்ளது வளைகுடாவில் வாழும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment