Monday, November 28, 2011

கனிமொழியுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்தேன்: கருணாநிதி

 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மாநிலங்களவை உறுப்பினரும், தன்னுடைய மகளுமான கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்தார். 

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத் குமார் உள்பட 5 பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் மகிழ்ச்சி தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, "கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நீதிமன்றம் ஜாமீன் உத்தரவு பிறப்பித்தவுடனே என்னிடம் அவர் தொலைபேசியில் பேசினார். இவரும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டோம்," என்றார். 
சென்னையில் கனிமொழிக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பை அளிப்பார்கள் என்றவரிடம், கனிமொழிக்கு கட்சியில் புதிய பதவி ஏதேனும் அளிக்கப்படுமா என்று கேட்டதற்கு, "நான் முடிவு செய்ய முடியாது. கனிமொழிக்கு புதிய பதவி அளிப்பது பற்றி கட்சி தான் முடிவு செய்யும்," என்றார். 

முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஜாமீன் கோருவாரா என்பது பற்றி கேட்டதற்கு, தன்னிடம் ராசா பேசினால், அவரது ஜாமீன் பற்றி ஆலோசிக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார். 

2ஜி வழக்கில், கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துள்ளதில், திமுகவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கடந்த மே 20-ல் இருந்து 6 மாத காலமாக, திகார் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment