Friday, June 17, 2011

‘ரஜினி, விஜய் – மிஷ்கின், கவுதம் மேனன்’ யார் ஆபத்தானவர்கள்?

இன்று புதிய இளம் இயக்குநர்கள் சினிமாவில் தரமான படங்களை தந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் ரஜினி, விஜய் போன்றவர்களின் படங்கள் அவைகளை காலி செய்துவிடுகிறதே?
ரஜினி, விஜய் இவர்களைவிட இந்த சினிமாவை திருத்த வந்திருக்கிற இந்த சீர்திருத்த இளம் இயக்குநர்களை நினைச்சாதான் நமக்கு அடிவயித்த கலக்குது.

இவுங்க சினிமா மொழியை பத்தி சிலாகிச்சி பேசுறாங்க… அதெல்லாம் நல்லதான் இருக்கு. ஆனால், அவுங்களோட சொந்தக் கருத்து இருக்கு பாருங்க… பார்ப்பனிய இந்துக் கண்ணோட்டமும் அனைத்து விதமான ஆதிக்கத்தையும் ஆதரிக்கிற பிற்போக்கு நிறைந்த பயங்கரவாதமா இருக்கு.

இவர்களுக்கும், ‘நவீன பாணி சினிமா’ என்ற பெயரில் இஸ்லாமியர் எதிர்ப்பு படங்களை எடுத்த மணிரத்தினத்திற்கும்; ஒரு சின்ன வித்தியாசம்தான்;

ஒரு படத்தில் வடிவேலுவைப் பாத்து மனோபாலா சொல்லுவாரே: ‘அவன் பயங்கர கருப்பா இருப்பான். நீ கருப்பா பயங்கரமா இருக்கே’ என்று, அது போன்ற வித்தியாசம்தான்.

ஆள் கடத்தல், பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகிற போலிஸ்காரர்கள் செய்கிற கொலைகளை நியாயப்படுத்தி, அவர்களை தியாகிகளை போல் காட்டுகிற கவுதம் மேனன், மிஷ்கின் – இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டுகிற ராதாமோகன், இவர்களின் படங்களைவிட ரஜினி படமும், விஜய் படமும் எவ்வளவோ பரவாயில்லை.

விட்டா, இந்த சீ்ர்திருத்த செம்மல்கள், இலங்கை ராணுவத்தின் கொலைவெறியைக்கூட நியாப்படுத்தி படம் எடுத்தாலும் எடுப்பார்கள்.

ஆமாம், ரீட்டமேரியையும், வீரப்பனுககு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், மலைவாழ் பெண்களையும் இன்னும் தாழ்த்தப்பட்ட மிக எளிய பெண்களையும் வன்புணர்ச்சி செய்து கொலையும் ஆள் கடத்தலும் செய்த போலிஸ்காரர்களை, தியாகிகளாக காட்டுகிற இவர்கள், ராஜபக்சே ராணுவத்தின் கொலைவெறியை நியாயப்படு்த்தி படம் எடுப்பதற்கு எல்லாத் தகுதிகளும் நிறைந்தவர்கள்.

இவர்கள் படங்களோடு ஒப்பிடும்போது, ‘சரோஜா“ படத்தை ‘புரட்சிகர’ படம் என்றே சொல்லலாம்; அந்தப் படம், பொண்ண கடத்துனது பூரா போலிஸ் கும்பல்தான் என்று காட்டியது.

No comments:

Post a Comment